முகப்பு
இந்தியா

பஞ்சாப், பிகாரில் போலீஸாரின் நடவடிக்கை மிருகத்தனமானது: உச்ச நீதிமன்றம் கண்டனம்

பஞ்சாபில் இளம் பெண் மீதும், பிகாரில் ஆசிரியர்கள் மீதும் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கை மிருகத்தனமானது

Updated On : 12 மார்ச் 2013, 1:14 am IST
பகிர்:

பஞ்சாபில் இளம் பெண் மீதும், பிகாரில் ஆசிரியர்கள் மீதும் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கை மிருகத்தனமானது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்று அந்த இரு மாநில காவல் துறை டிஜிபி-க்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பஞ்சாபில் கடந்த 4-ம் தேதி, இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் போலீஸாரிடம் புகார் கொடுக்கச் சென்றார். அப்பகுதியில் உள்ள லாரி டிரைவர்கள் தன்னை தொந்தரவு செய்வதாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால் போலீஸார் புகார் அளிக்க வந்த அந்த பெண்ணையும், அவரது தந்தையையும் கடுமையாக அடித்து உதைத்தனர். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

கடந்த 5-ம் தேதி பிகாரில் சட்டப்பேரவைக்கு வெளியே, பணி நிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஒப்பந்த ஆசிரியர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

முக்கியமாக இளம்பெண்ணை காவலர்கள் இருவர் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இப்பிரச்னையை தானாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி காவல் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன? என்று கேள்வி எழுப்பி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாதாரண மக்கள் மீது போலீஸார் மிகக்கடுமையான முறை தாக்குதல் நடத்தியது ஏன்? என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென பஞ்சாப், பிகார் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தலைமைச் செயலர்கள், உள்துறை செயலர்கள், டிஜிபி, கமிஷனர்கள் என அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.