முகப்பு
இந்தியா

தில்லி உயர்நீதிமன்ற தாக்குதல் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

தில்லி உயர்நீதிமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாஸிம் அக்ரம் மாலிக் மீதான

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:20 am IST
பகிர்:

தில்லி உயர்நீதிமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாஸிம் அக்ரம் மாலிக் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

அதையடுத்து, வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள அமீர் அபாஸ் தேவின் சாட்சியத்தை நீதிபதி ஐ.எஸ். மேத்தா பதிவு செய்தார்.

தில்லி உயர்நீதிமன்றத்தின் வரவேற்பு மையம் அருகே 2011-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பயங்கவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 

Advertisement

Advertisement

இது தொடர்பான வழக்கில் வாஸிம் அக்ரம் மாலிக், அமீர் அபாஸ் தேவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சிவசம்  ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிபதி ஐ.எஸ். மேத்தா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வாஸிம் அக்ரம் மாலிக் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 120-பி(தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல்) பிரிவின் கீழும் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி கேட்டுக் கொண்டது. அந்தக் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்தது.

இதையடுத்து தில்லி உயர்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சி மேல் முறையீடு செய்தது.

அதைத் தொடர்ந்து, தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் பிரிவின் கீழும் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கு விசாரணையை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றத்தில் மாலிக் மீதான விசாரணை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

மாலிக்குடன் கைது செய்யப்பட்ட அமீர் அபாஸ் தேவ் அப்ரூவர் ஆனதால் அவருக்கு ஏற்கெனவே நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியிருந்தது.

அவரிடம் நீதிபதி ஐ.எஸ். மேத்தா விசாரணை நடத்தி சாட்சியத்தைப் பதிவு செய்தார். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 164-ன் கீழ் அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை செவ்வாய்க்கிழமையும் தொடரும் என்று நீதிபதி கூறினார்.

அமீர் அபாஸின் சாட்சியம் பதிவு செய்யப்பட்ட பிறகு மாலிக்கின் வழக்குரைஞர் அவரிடம் குறுக்கு விசாரணை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.