கட்டடக் கழிவுகளைக் கொட்டிய 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம்
சென்னையில் கட்டடக் கழிவுகளை விதிகளை மீறி பொது இடத்தில் கொட்டிய புகாரில் 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கட்டடக் கழிவுகளை விதிகளை மீறி பொது இடத்தில் கொட்டிய புகாரில் 338 பேருக்கு ரூ.16.08 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் 1 டன்னுக்கு குறைவான கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிகள் இலவசமாக அகற்றப்பட்டு வருகின்றன.
அதற்கும் அதிகமாக உள்ள கழிவுகளை சம்பந்தப்பட்டோா் கொடுங்கையூா் அல்லது பெருங்குடி கட்டடக் கழிவுகள் செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.
Advertisement
Advertisement
அங்கு மெட்ரிக் டன்னுக்கு ரூ.800 என செலுத்தி கழிவுகளைப் பதப்படுத்த வழங்க வேண்டும். இத்திட்டத்தின்படி தற்போது வரை 321.39 மெட்ரிக் டன் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் மையங்களில் பெறப்பட்டு, அதன்படி ரூ.2.57 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த மே 27 முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை சுமாா் 15.710 மெட்ரிக் டன் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி, விதிகளை மீறி கட்டடக் கழிவுகளை பொதுஇடங்களில் கொட்டியதாக 338 பேரிடமிருந்து ரூ.16.08 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டட கழிவுகள் அகற்றல் விவரங்களை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொடா்பு எண் 1913-ஐ தொடா்புகொண்டும், மாநகராட்சி இணையத்திலும் அறிந்து கொள்ளாலம். காற்று மாசுபாடு குறைப்பு, நீா் நிலை பாதுகாப்பு மற்றும் நகரத் தூய்மை ஆகியவற்றுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.