முகப்பு
இந்தியா

பாலியல் குற்றம் தொடர்பான பொதுநல மனு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான பொதுநல மனு மீது 3 வாரங்களுக்குள் பதில்

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:59 am IST
பகிர்:

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான பொதுநல மனு மீது 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததையடுத்து, மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:

இப்போது, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு தண்டனை வழங்குவதற்கு எவ்வித வழிகாட்டு நெறிமுறையும் இல்லை. இதனால் ஒரே விதமான குற்றத்துக்கு வழங்கப்படும் தண்டனை வேறுபடுகிறது.

Advertisement

Advertisement

இந்திய தண்டனைச் சட்டம் 376-ன் (பலாத்காரம்) கீழ் குற்றம்சாட்டப்படும் நபருக்கு 7 ஆண்டுகளுக்கு குறையாமல் தண்டனை வழங்கலாம். ஆயுள் தண்டனையும் வழங்கலாம். அல்லது 10 ஆண்டு தண்டனை வழங்கலாம் என உறுதி இல்லாமல் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்கு இந்த தண்டனை என குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்க வகை செய்ய வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை வரையறை செய்வதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் பெயர்கள் அடங்கிய பதிவேடு பராமரிக்கப்படுகிறது.

இதுபோன்ற பதிவேட்டை பராமரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டனையை முடித்தவர்களின் பெயரையும் இந்தப் பதிவேட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும். இதன்மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீது 3 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய சட்டத் துறை அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய உள் துறை அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.