பிப்ரவரியில் மின்சார பற்றாக்குறை 7.9 % ஆகக் குறைந்தது
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மின்சார பற்றாக்குறை 7.9 சதவீதமாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மின்சார பற்றாக்குறை 7.9 சதவீதமாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 11.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ.) சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வருமாறு:
பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மின்சார தேவை 1,26,439 மெகாவாட்டாக இருந்தது. ஆனால் மின்சார சப்ளை 1,16,495 மெகாவாட்டாக இருந்தது. அதாவது மின்சார தேவையைவிட சப்ளை 7.9 சதவீதம் குறைவாக இருந்தது. ஜனவரி மாதத்தின் மின்சார தேவை 1,32,948 மெகாவாட்டாக இருந்தது. சப்ளை 1,17,790 ஆக இருந்தது.
Advertisement
அதிக அளவில் மின்பற்றாக்குறை நிலவும் தென்மண்டலத்தில் நிலைமை மேம்பாடு அடைந்ததே மின் பற்றாக்குறை குறைந்ததற்குக் காரணமாக அமைந்தது.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தைப் பொறுத்தவரை, ஜனவரியில் 20.4 சதவீதமாக (7,620 மெகா வாட்) இருந்த மின் பற்றாக்குறை, பிப்ரவரி மாதத்தில் 13.1 சதவீதமாகக் (4,712 மெகா வாட்) குறைந்து காணப்பட்டது.
மேற்கு மண்டலத்தில் ஜனவரி மாதத்தில் 5.8 சதவீதமாக இருந்த மின்சார பற்றாக்குறை, பிப்ரவரியில் 2.6 சதவீதமாகக் குறைந்தது. வடகிழக்கு மண்டலத்தில் 6.6 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாகக் குறைந்திருந்தது. வடக்கு மண்டலத்தில் 10.9 சதவீதத்திலிருந்து 9.3 சதவீதமாகக் குறைந்திருந்தது. கிழக்கு மண்டலத்தில் ஜனவரி மற்றும் பிப்ரபரி ஆகிய இரண்டு மாதங்களிலும் மின்சார பற்றாக்குறை மாற்றமின்றி 5.3 சதவீதமாகவே நீடித்தது. இவ்வாறு சி.இ.ஏ. புள்ளி விவரம் கூறுகிறது.