மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.3 குறைப்பு
சர்வதேச சந்தையில் விலை குறைந்ததையடுத்து, மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையில் ரூ.3
சர்வதேச சந்தையில் விலை குறைந்ததையடுத்து, மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இது திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
விலைக் குறைப்புக்குப் பிறகு, தில்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.901.50க்கு விற்கப்படுகிறது. இது கடந்த மாதம் ரூ.904.50க்கு விற்கப்பட்டது. மானியம் வழங்கப்படும் சிலிண்டர் மீதான நஷ்டம் ரூ.439லிருந்து ரூ.434.50 ஆகக் குறையும்.
சென்னையைப் பொறுத்தவரை ஒரு சிலிண்டருக்கு ரூ.6.50 குறைந்துள்ளது. இனி மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டர் ரூ.891.50க்குக் கிடைக்கும். கடந்த மாதம் ரூ.898-க்கு விற்கப்பட்டது. எரிவாயு சிலிண்டர் விலை மும்பையில் ரூ.912 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.926.50 ஆகவும் குறைந்துள்ளது
Advertisement
மத்திய அரசு, மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுப்பாடு கொண்டு வந்தது. இதன்படி ஆண்டுக்கு ஒரு வாடிக்கையாளருக்கு 6 சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும் என்றும், கூடுதல் சிலிண்டர் தேவைப்படுவோர் சந்தை விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
எனினும், மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்துவதாக ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது.
ஒரு மாதம் முழுவதும் நிலவும் விலை நிலவரத்துக்கேற்ப, மானியம் அல்லாத சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.