முகப்பு
இந்தியா

ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவர்களுக்கு வீட்டுக் காவல்

ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக் உள்ளிட்ட மூவர் வீட்டுக் காவலில்

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:38 am IST
பகிர்:

ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக் உள்ளிட்ட மூவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த விவரம்:

நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு கடந்த பிப்ரவரி மாதம் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. அவரது உடலை சொந்த ஊரான காஷ்மீருக்கு அனுப்பக் கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் அங்கு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில் தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களுடன், வடக்கு காஷ்மீரின் சோபூரில் உள்ள அப்சல் குருவின் வீட்டுக்கு திங்கள்கிழமை (ஏப்.1) நேரில் செல்லப் போவதாக மிதவாதப் பிரிவு ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கருதிய காவல்துறையினர் அவரை வீட்டுக் காவலில் வைத்தனர்.

மேலும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜாபர் அக்பர் பத், மிர்வாய்ஸின் ஆலோசகர் ஷாகிதுல் இஸ்லாம் ஆகியோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இன்னொரு ஹுரியத் தலைவரும் காஷ்மீர் மக்கள் முன்னணித் தலைவருமான முக்தார் அகமது ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 இது குறித்து மிர்வாய்ஸ் கூறியதாவது:

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட போது தில்லியில் வீட்டுக் காவலில் இருந்தேன். அதன் பிறகு அவரது வீட்டுக்குச் செல்லவில்லை. அதனால் அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரைச் சந்திக்கவிருந்தேன். இந்நிலையில் இப்போது மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.