காங்கிரஸ் ஆதரவுடன் நிகழ்ந்தது சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்
கடந்த 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெற்றதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
கடந்த 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் நடைபெற்றதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் பிரமுகர் ஜகதீஷ் டைட்லர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
Advertisement
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதரவுடனேயே ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட பிறகு, "பெரிய மரம் சாய்ந்தால் பூமியில் அதிர்வு ஏற்படும்' என ராஜீவ் காந்தி கூறியிருந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து 28 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. அமைதி காப்பதற்குக் காரணம் என்ன?
இந்த சம்பவம் காந்தி குடும்பத்தினரின் உணர்வுகளை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கோத்ரா சம்பவத்துடன் ஒப்பிட முடியாது. கோத்ரா சம்பவத்தின்போது, ராணுவம் வரவழைக்கப்பட்டது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், சீக்கியர் மீதான கலவரம் ஒரு தரப்பினரை குறிவைத்து நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் பதிவு செய்யப்படவில்லை. கலவரம் மூண்ட மூன்றாவது நாளில் தில்லியில் மட்டும் ராணுவம் வரவழைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில், 4ஆவது நாள்தான் ராணுவம் வரவழைக்கப்பட்டது என்றார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய பல்வேறு குழுக்கள், ஹெச்.கே.எல். பகத், தரம்தாஸ் சாஸ்திரி, சஜ்ஜன் குமார் மற்றும் கமல் நாத் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டி உள்ளன என பா.ஜ.க. கூறியுள்ளது.