சோனியா மீதான சுஷ்மாவின் புகார் ஆதாரமற்றது: ப. சிதம்பரம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்பாக பா.ஜ.க தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறிய புகார் ஆதாரமற்றது என மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், மணீஷ் திவாரி கூறியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்பாக பா.ஜ.க தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறிய புகார் ஆதாரமற்றது என மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், மணீஷ் திவாரி கூறியுள்ளனர்.
மக்களவையில் தன்னை பேச விடாமல் சோனியா காந்தி, தடுத்து விட்டார். மத்திய அமைச்சர்களை தூண்டி விட்டு தன்னை பேச விடாமல் செய்தார் என சுஷ்மா ஸ்வராஜ் புகார் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக அமைச்சர்கள் இருவரும் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Advertisement
சோனியா காந்தி மீதான இந்த புகார் ஆதாரமற்றது. மக்களவை நடவடிக்கைகள் தொடர்பான ஒளிப்பதிவு காட்சிகளை வைத்தே இதை அறிந்து கொள்ளலாம்.
நான் உள்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் அவையில் இருந்தோம். அவை நடவடிக்கைகளை சில தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. சுஷ்மா ஸ்வராஜ் பேசிய போது சோனியா காந்தி எந்த வகையிலும் குறுக்கிடவில்லை. சுஷ்மாவின் புகார் ஆதாரமற்றது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்.
சோனியா காந்தி மீது தனிப்பட்ட முறையில் சுஷ்மா ஸ்வாராஜ் புகார் கூறியுள்ளது வருத்தத்தை தருகிறது. இது கண்டனத்துக்குரியது.
மக்களவைத் தலைவர் மீராகுமார் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் ஆகியோர் கூட்டும் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற தமது முடிவை பா.ஜ.க. மறுபரிசீலனை செய்ய வேண்டும். இம்முடிவு மிகவும் வேதனை தருகிறது.
முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. எதிர்க்கட்சிகள் மீண்டும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வர் என நம்புகிறோம். வரும் 10-ம் தேதிக்குள் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர்.