முகப்பு
இந்தியா

அமைச்சர் பதவியைப் பிடிக்க கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்

அமைச்சர் பதவியைப் பிடிக்க கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் தில்லியில் மேலிடத் தலைவர்களை முற்றுகையிட்டுள்ளனர்.

Updated On : 22 மே, 2013 at 3:05 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

அமைச்சர் பதவியைப் பிடிக்க கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் தில்லியில் மேலிடத் தலைவர்களை முற்றுகையிட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கட்சியின் முதல்வராக சித்தராமையா மே 13-ஆம் தேதி பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மே 18-ஆம் தேதி பதவியேற்றனர்.

இந்த நிலையில், அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் பல மூத்த உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், காங்கிரஸ் மேலிடத்திற்கு கடிதம் எழுதுவது உள்ளிட்டவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

Advertisement

இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அமைச்சரவையில் 5 பேர் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதில் எப்படியாவது இடம்பிடித்திட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களும், எம்.எல்.சி.க்களும் தில்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை முற்றுகையிட்டுள்ளனர்.

குறிப்பாக, எம்.எல்.ஏ.க்கள் டி.கே.சிவக்குமார், கே.பி.கோலிவாட், சித்துநியாமே கெüடா, பி.பி.செம்மனகட்டி, எம்.கிருஷ்ணப்பா, எம்.எல்.சி.க்கள் வீரண்ணமத்திகட்டி, எஸ்.ஆர்.பாட்டீல், மோட்டம்மா உள்ளிடோர் தில்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் அமைச்சர் பதவிக்காக மேலிடத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் முதல்வர் சித்தராமையா தனது பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மே 22-ஆம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்று 4-ஆம் ஆண்டு நிறைவு விழா தில்லியில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள முதல்வர் சித்தராமையா தில்லி செல்ல முடிவு செய்துள்ளார். அப்படி அவர் தில்லிக்கு செல்லும்போது இரண்டாம் கட்டமாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து கட்சி மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது.

அப்போது அமைச்சர்களாக 5 பேர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது. அதில் தங்களது பெயரை இடம்பெறச் செய்ய தில்லியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ, எம்.எல்.சி.க்கள் கடும் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.