வெள்ள நிவாரணப் பணியில் தொய்வு: உத்தரகண்ட் அரசை நீக்க சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தல்
உத்தரகண்டில் வெள்ள நிவாரணப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறிய மாநில அரசை
உத்தரகண்டில் வெள்ள நிவாரணப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறிய மாநில அரசை நீக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் "டுவிட்டர்' இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உத்தரகண்ட் அரசு, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையை உரிய வகையில் கையாளவில்லை. நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் திறனற்று இருக்கும் அந்த அரசை உடனடியாக நீக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, மாநிலத்துக்குத் தேவையான தலைமையை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது.
Advertisement
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே பா.ஜ.க. தலைவர்கள் உத்தரகண்ட் மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. அங்கு வி.ஐ.பி.க்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டதாலேயே நாங்கள் அங்கு செல்லவில்லை.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரம் குறித்து நான்தான் மத்திய அரசை உஷார்படுத்தினேன். உள்துறை அமைச்சருடன் கடந்த மாதம் 18ஆம் தேதி தொலைபேசியில் பேசியபோது, அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மை குறித்து நான் அவரிடம் எடுத்துக் கூறினேன்.
ஆட்சியின் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டும்போது, அவை அரசியல் செய்வதாகக் கூறி அரசு தப்பித்துக் கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தோல்விகளை மறைத்து, தப்பிக்க முடியாது. உத்தரகண்டில் மத்திய அரசு எதையும் செய்யவில்லை. அங்கு அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் ராணுவம், விமானப்படை, இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை ஆகியவை தங்களின் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்டன. ஆனால் இந்தப் பணிகள் அனைத்தையும் தாங்களே மேற்கொண்டதாக அரசு உரிமைக் கோரக்கூடும்.
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரின் முயற்சிகளுக்காக அவர்களை வணங்குகிறேன். இந்த விஷயத்தில் மாநில அரசும் எதையும் செய்யவில்லை. அங்கு மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.
இறந்தவர்களின் உடல்களில் இருந்து தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. நெருக்கடியான நேரத்தில் ஆட்சி நடத்த முடியாதவர்கள், ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்று சுஷ்மா தெரிவித்துள்ளார்.