பிஃபா 2026: பரபரப்பான நியூசிலாந்து - ஈரான் ஆட்டம் சமனில் முடிந்தது!
பரபரப்பான நியூசிலாந்து - ஈரான் ஆட்டம் சமனில் முடிந்ததைப் பற்றி...
பிஃபா உலகக்கோப்பையில் பரபரப்பான நியூசிலாந்து - ஈரான் இடையேயான ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் இந்தாண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 48 அணிகள் பங்கேற்று 16 நகர்களில் 104 போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய கால்பந்து திருவிழா, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரியில் ஈரானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளைத் தொடங்கியதன் பின்னணியில், ஈரானிய கால்பந்து அணியினர் உலகக் கோப்பையில் பங்கேற்பதே கேள்விக்குறியாக இருந்தது.
Advertisement
Advertisement
சர்வதேச அளவில் அரசியல் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சோஃபி கால்பந்து திடலில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள ஈரான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் தங்களது தொடக்க போட்டியில் நேருக்கு நேர் மோதின. 84-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை 20-வது இடத்தில் உள்ள ஈரான் அணி எதிர்கொண்டது.
இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக கோல் அடிக்க முயன்றனர். போட்டி தொடங்கிய 7-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் கிறிஸ் வுட் பந்தை எலிஜா ஜஸ்ட்டுக்கு அனுப்ப, அவர் பெனால்டி பகுதிக்குள் இருந்து கோல் அடித்தார். இதனால், நியூசிலாந்து அணியின் கை ஓங்கியது.
தொடந்து ஆட்டம் நடைபெற்ற நிலையில், ஈரான் வீரர் ராமின் ரெசையன் 32 நிமிடத்தில் கோல் அடித்து சமனுக்கு கொண்டு வந்தார். இதனால், முதல் பாதி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் இரண்டு அணிகளும் சரிசமமாக மோதின.
54-வது நிமிடத்தில் நியூசிலாந்தின் எலிஜா ஜஸ்ட் இரண்டாவது கோலைப் போட, 64-வது நிமிடத்தில் ஈரான் வீரர் முகமது மொஹெப்பி, தலையால் முட்டி பந்தை வலைக்குள் தூக்கி அடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலையானது.
மூன்றாவது கோலை நோக்கி இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடியபோதும் அவர்களால் போட முடியவில்லை. இதனால், நேர முடிவில், ஆட்டம் சமனில் முடிந்தது.
ஜி பிரிவில், ஈரான் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தையும், அதே நேரத்தில் நியூசிலாந்து அணி எகிப்தையும் எதிர்கொள்கின்றன.