காஷ்மீரில் ஊடுருவலை முறியடிக்க பாதுகாப்புப் படை தயாராக உள்ளது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகளின் ஊடுருவல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஆனால் அதை முறியடிப்பதற்கு பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் காஷ்மீர் பகுதிக்கான ராணுவ தளபதி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புக்கு பயங்கரவாதிகளின் ஊடுருவல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஆனால் அதை முறியடிப்பதற்கு பாதுகாப்புப் படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் காஷ்மீர் பகுதிக்கான ராணுவ தளபதி கூறியுள்ளார்.
ஸ்ரீநகரில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவத்தின் 15ஆவது படை பொது தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் (படம்) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அப்பகுதியில் பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. ஊடுருவலை முறியடிப்பதற்கான முயற்சியில் உளவுப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
Advertisement
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள நமது வீரர்கள் மிகவும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக, குப்வாரா மாவட்டம் கெரன் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நடவடிக்கையின்போது, 5 பயங்கரவாதிகளை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பாதுகாப்புப் படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
உளவு தகவல் சேரிப்பதற்கான முயற்சிக்கு பொதுமக்களும் ஆதரவளித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் இதுதொடர்பாக ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் ஊடுருவல் தொடர்பான உளவுத் தகவல் சேகரிப்புப் பணி திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.
ஹைதர்போரா பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அது ஒரு எதிர்பாராத நிகழ்வு. இந்த நிகழ்விலிருந்து ராணுவம் பாடம் கற்றுக் கொண்டுள்ளது.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ராணுவத்தின் நிலைப்பாடு என்ன என்பது அரசுக்குத் தெரியும் என்றார் சிங்.