காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு
காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முழுமையாகத் தளர்த்தப்பட்டது.
காஷ்மீரில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முழுமையாகத் தளர்த்தப்பட்டது.
முன்னதாக ராம்பன் மாவட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து ஹுரியத் மாநாட்டுக் கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து, ஸ்ரீநகர், பட்காம், கந்தேர்பால், பந்திபோரா ஆகிய மாவட்டங்களிலும், சோபியான், புல்வாமா, குல்காம், அனந்த்நாக், பைஜிபெகாரா, சோபூர் ஆகிய நகரங்களிலும் கடந்து வெள்ளிக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Advertisement
மாநிலத்தில் அமைதி திரும்பி வருவதால், ஊரடங்கு உத்தரவை முழுமையாகத் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டது. எனினும் மாநிலம் முழுவதும் ராணுவத்தினரும், போலீஸாரும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ராம்பன் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதிலும், ஹுரியத் மாநாட்டுக் கட்சி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இயல்பு நிலை திரும்பவில்லை.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் இல்லை.
தலைநகர் ஸ்ரீநகரில் ஒரு சில தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டன. சாலையோர கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டன. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.