டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து: திக்விஜய் சிங் மீது வழக்குப் பதிவு
மத்தியப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் ராகவ்ஜி பற்றி இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் மீது போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் ராகவ்ஜி பற்றி இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மத்தியப் பிரதேச மாநில பாரதிய ஜனதா அரசில் நிதியமைச்சரகாக பதவி வகித்த ராகவ்ஜி மீது அண்மையில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் டுவிட்டர் இணையதளத்தில், ராகவ்ஜியை கிண்டலடித்து கருத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து ராகவ்ஜியை குறிப்பிடவில்லை என்று திக்விஜய் சிங் மறுப்பு தெரிவித்தார்.
Advertisement
திக்விஜய் சிங்கின் கருத்து ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் சங்கீத் வர்மா, போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து, ஷாபுரா காவல் நிலையத்தில் திக்விஜய் சிங் மீது ஞாயிற்றுக்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, திக்விஜய் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் தொண்டர்கள் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.சி.சர்மா தலைமையில் ஷாபுரா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆட்சியாளர்களின் வற்புறுத்தலின் பேரிலேயே திக்விஜய் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் கொள்ளை, பாலியல் பலாத்காரம், திருட்டுக் குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகவ்ஜி விவகாரத்தில் புகார் தாமதமாக அளிக்கப்பட்டுள்ளது என்று சர்மா குற்றம் சாட்டினார்.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். பின்னர் அவர்களை கைதுசெய்து காந்திநகர் சிறைக்கு கொண்டு சென்றனர்.