விற்பனை தந்திரங்களை பயன்படுத்துகிறார் மோடி
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விற்பனை தந்திரங்களை பயன்படுத்துகிறார் என்றும் உலகம் முழுவதும் உள்ள குஜராத்திகளின் தொழில்களுக்கும் தானே காரணமென்று சொல்லக் கூடியவர் அவர் என்றும் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் பேசியிருக்கிறார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விற்பனை தந்திரங்களை பயன்படுத்துகிறார் என்றும் உலகம் முழுவதும் உள்ள குஜராத்திகளின் தொழில்களுக்கும் தானே காரணமென்று சொல்லக் கூடியவர் அவர் என்றும் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் பேசியிருக்கிறார்.
எழுச்சிமிகு குஜராத் என்கிற முதலீட்டாளர் மாநாடுகளை அந்த மாநில அரசு நடத்திவருகிறது. இந்தியாவைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான அளவில் இந்த மாநாடுகளில் கலந்துகொண்டு பெருமளவில் அந்த மாநிலத்தில் முதலீடு செய்வதாக அறிவித்து வருகின்றனர். அந்த மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இதனை ஒரு பெரும் எடுத்துக்காட்டாக முதல்வர் நரேந்திர மோடி கூறிவருகிறார்.
இந்நிலையில், இந்த திட்டத்தை மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் சச்சின் பைலட் தாக்கிப் பேசியிருக்கிறார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:
Advertisement
எழுச்சிமிகு குஜராத் என்கிற முதலீட்டாளர் மாநாட்டை அந்த மாநிலம் ஏற்பாடு செய்தது. அதனால் கிடைத்த பலன்களை அதிகப்படுத்திச் சொல்லுவது ஒரு விற்பனை தந்திரம். மோடி இதன் பின்னணியில் உள்ளார்.
கடந்த 50-60 வருடங்களாக குஜராத்திகள் பல விதமான தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா என பல இடங்களில் தொழில் செய்துவருகின்றனர். அதற்கான பாராட்டுகளையும் நரேந்திர மோடி எடுத்துக் கொள்ளட்டும்.
குஜராத்தின் வளர்ச்சி பற்றி தவறான தகவல்கள் உள்ளன. பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தொழில் ரீதியாக குஜராத் முன்னேற்றம் அடைந்த மாநிலமாகவே இருந்துவருகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் தானே காரணம் என்று கூறிக் கொள்வது இயல்பாக இல்லை. அதில் வெறும் அரசியல்தான் இருக்கிறது.
குஜராத் நிலைமை மோசம் என்று நான் கூற மாட்டேன். பல விஷயங்களில் குஜராத் முன்னேற்றம் அடைந்திருப்பது உண்மைதான். ஆனால் சில அளவுகோல்களால் அதிகப்படுத்திக் காண்பிக்கப்படுகிறது என்றார். அந்த மாநிலத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் அவற்றில் எவ்வளவு நிறைவேறியுள்ளன என்பது குறித்தும் புகார் வந்தால் விசாரிப்பீர்களா என்று கேட்டதற்கு, புகார் அளிக்கப்பட்டால் விசாரிப்பேன் என்று பைலட் சொன்னார்.