முகப்பு
இந்தியா

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடைநீக்கம் சரியே

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாம்பால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கையே என்று தெரிவித்துள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

Updated On : 2 ஆகஸ்ட், 2013 at 1:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:16 PM

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாம்பால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கையே என்று தெரிவித்துள்ளார் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்.

அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அகிலேஷ் யாதவ், "உயர் அதிகாரிகளிடம் ஆலோசிக்காமல் மசூதியின் சுற்றுச்சுவரை இடிக்க துர்கா உத்தரவிட்டுள்ளார்.

இதன்அடிப்படையில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் கடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுத்ததாலேயே அவர் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.

Advertisement

இதுபோன்ற நடவடிக்கைகளில் அதிகாரி ஈடுபடும்போது, அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

பல்வேறு துறைகளில் நியமிக்கப்படும் அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். துர்கா மீது எடுக்கப்பட நடவடிக்கை சரியானது' என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத் நகர் பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது துணை ஆட்சியராக இருந்த துர்கா குற்ற வழக்குகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையடுத்து, அவர் அப்பகுதில் இருந்த மசூதியின் சுற்றுச்சுவரை தன்னிச்சையாக இடிக்க உத்தரவிட்டதாகக் கூறி, அவரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்ததாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

"அதிகாரிக்கு நீதி கிடைக்கும்': இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமியை, அகில இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஆர். பூஸ்ரெட்டி தலைமையிலான நிர்வாகிகள் வியாழக்கிழமை தில்லியில் சந்தித்தனர்.

அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர், "பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலுக்கு நீதி கிடைக்கும்' என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி சஞ்சய் ஆர். பூஸ்ரெட்டி கூறுகையில், "துர்கா சக்தி பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். அதனால் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.

மொத்தம் 4737 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தின் சார்பில், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்துவிட்டு, மீண்டும் அவரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலத்துறையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொந்த விவகாரங்களை கவனிக்கும் தனித்துறை, துர்கா சக்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவை உத்தரப்பிரதேச மாநில அரசிடம் பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.