முகப்பு
இந்தியா

செவ்வாய்க் கிரகத்துக்கு அடுத்த மாதம் விண்கலம் அனுப்ப "இஸ்ரோ' திட்டம்

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அடுத்த மாதம் விண்கலம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, "இஸ்ரோ'வின் செவ்வாய் வட்டச் சுற்றி திட்ட (மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) இயக்குநர் எஸ்.அருணன் தெரிவித்தார்.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 2:52 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக அடுத்த மாதம் விண்கலம் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று, "இஸ்ரோ'வின் செவ்வாய் வட்டச் சுற்றி திட்ட (மார்ஸ் ஆர்பிடர் மிஷன்) இயக்குநர் எஸ்.அருணன் தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

இந்தியாவில் இருந்து பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கும், சந்திரனுக்கும் ஏற்கெனவே செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில், பூமியில் இருந்து வேற்று கிரகத்திற்கு ஆராய்ச்சியில் ஈடுபட அனுப்பப்படும் முதல் விண்கலம் செவ்வாய் வட்டச் சுற்றி(ஙஹழ்ள் ஞழ்க்ஷண்ற்ங்ழ்) ஆகும். சோதனைகள் முடிந்து விண்கலம் வருகிற 26-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

Advertisement

பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட்டின் உதவியுடன் இந்த ஆண்டு அக்டோபர் 21 முதல் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். 1,340 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் லைமன் ஆல்ஃபா போட்டோ மீட்டர் (கஅட), மீத்தேன் சென்சார் ஃபார் மார்ஸ் (ஙநங), மார்ஸ் எக்சோஸ்பெரிக் நியூட்ரல் காம்போசிசன் அனலைசர் (ஙஉசஇஅ), மார்ஸ் கலர் கேமரா (ஙஇஇ), தெர்மல் இன்ஃராரெட் இமேஜிங் ஸ்பெக்டோ மீட்டர் (பஐந) ஆகிய 5 அறிவியல் ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றின் மொத்த எடை 15 கிலோவாக இருக்கும். அறிவியல் ஆய்வுக் கருவிகள், செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பு, வளிமண்டலம், கனிம வளங்கள், மீத்தேன் இருப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும்.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் விண்கலம், 9 மாதங்கள் 21.8 கோடி கி.மீ. தொலைவை விண்வெளியில் பயணம் செய்த பிறகு செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும்.

செவ்வாய்க் கிரகத்தின் நீள் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் விண்கலம், அதன் பரப்பில் இருந்து 385 கி.மீ. நெருக்கத்திலும், 80 ஆயிரம் கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும். செவ்வாய் கிரகத்தை ஒரு முறை சுற்றிவர 3 நாள்கள் பிடிக்கும். 6 மாதகாலம் விண்கலம் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடும்.

அப்போது, விண்கலம் 38.5 கி.மீ. தொலைவு பயணிக்கும். விண்கலத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அவற்றைத் தானாகவே சீர் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு இதர நாடுகள் அனுப்பிய விண்கலங்கள் 50 சதம் மட்டுமே வெற்றி கண்டுள்ளன.

அதைக் கருத்தில் கொண்டு, நமது விண்கலத்தை முழுமையாக வெற்றியடைய செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டிற்கு ரூ.110 கோடி, விண்கலத்திற்கு ரூ.150 கோடி உள்பட இந்தத் திட்டத்திற்கு ரூ.450 கோடி செலவாகும் என்றார் அவர்.

முன்னதாக, இந்திய தொலை உணர்வு, சிறிய, அறிவியல் மற்றும் மாணவர் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர், சந்திரயான்-2 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியது:

செவ்வாய்க் கிரக விண்கலத்திற்கு கடந்த ஆண்டு, செப்டம்பர் 21-ஆம் தேதிதான் மத்திய அரசு அனுமதி அளித்தது. ஓராண்டுக்குள் திட்டம் தயாராக உள்ளது. தொலைவிட கிரகத்தை அடைவதற்கு குறுகிய காலத்தில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டு, விண்ணில் செலுத்தத் தயாராக உள்ளது.

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினத்துக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் மீத்தேன் வாயுப் பொருள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதே இந்த விண்வெளிப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். செவ்வாய்க் கிரகத்தில் பூமியைப் போல, மனித வாழ்க்கை காணப்பட்டதா அல்லது நாளடைவில் செவ்வாய்க் கிரகத்தை போல பூமி மாறிவிடுமா என்பதை அறிய மீத்தேன் இருப்பை அறிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவின் தொழில்நுட்ப தற்சார்பை வெளிப்படுத்தும் வகையில் புதுமையாக செவ்வாய் ஆராய்ச்சி விண்கலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பேட்டியின் போது, இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் எஸ்.கே.சிவக்குமார் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.