அகோரியைப் போன்றவர் மோடி: சிவசேனைத் தலைவர் சர்ச்சை பேச்சு!
சிவசேனை (யுபிடி) கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தது பற்றி...
சிவசேனை (யுபிடி) கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் பிரதமர் நரேந்திர மோடியை அகோரி என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான சஞ்சய் ராவத், சிவசேனை (யுபிடி) கட்சியின் மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.
இவர் புனேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசுகையில், “நம் நாட்டின் அரசியலில் இப்படி ஒரு அகோரியைப் போன்ற நபரை இதுவரை நான் பார்த்ததில்லை. இவ்வளவு கொடூரமான ஒருவரும் இதற்கு முன் இருந்ததில்லை. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, பி.வி. நரசிம்ம ராவ், ராஜீவ் காந்தி, பாபாசாஹேப் அம்பேத்கர், பாலாசாஹேப் தாக்கரே போன்ற சிறந்த தலைவர்களை நம் நாடு உருவாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
ஆனால், மோடியின் ஒட்டுமொத்த குணத்தைப் பார்க்கையில் ஒரு அச்சம் உருவாகிறது. இப்படிப்பட்ட ஒருவர் எங்கிருந்து வந்தார்? ஔரங்கசீப்பை உருவாக்கிய அதே குஜராத் மண்ணில் இருந்து மோடியும் வந்துள்ளார்” என்று பேசினார்.
இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாகப் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, ”எதிர்க்கட்சியினர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். அவர்கள் தற்போது பிரதமர் மோடியையும், அரசியலமைப்புப் பதவியையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த குஜராத்தையும் அவமதிக்கத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடந்த காலங்களில் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக இழிவாகப் பேசி வந்தனர்.
ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எதிராக மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இப்போது, காங்கிரஸின் கூட்டாளியான சஞ்சய் ராவத் பிரதமருக்கு எதிராக கடுமையாகப் பேசியுள்ளார். ராவத் ஒரு படி மேலே சென்று, குஜராத்தை ஔரங்கசீப்பின் பூமி என்று அவமதித்துள்ளார். இதுவே அவர்களின் மனநிலை” எனப் பேசியுள்ளார்.
பாஜக தலைவர்கள் பலரும் சஞ்சய் ராவத் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.