முகப்பு
இந்தியா

சிவசேனை உத்தவ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்! 9-ல் 6 பேர் புறக்கணிப்பு!

சிவசேனை உத்தவ் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை எம்பிக்கள் புறக்கணித்தது பற்றி...

Updated On : 18 ஜூன் 2026, 1:36 pm IST
உத்தவ் தாக்கரே - கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டத்தை 6 பேர் புறக்கணித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்களில் 7 போ் தனி அணியாக பிரிந்து, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், தில்லியில் இன்று நடைபெற்ற சிவசேனை (உத்தவ்) கட்சியின் முக்கியக் கூட்டத்தில் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கட்சி தலைமை தரப்பில் கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

ஆனால், கட்சியில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் அனில் தேசாய், அரவிந்த் சாவந்த் மற்றும் ராஜாபாவ் வாஜே ஆகிய மூன்று பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து கொறடாவின் உத்தரவை பின்பற்றாத 6 எம்.பி.க்களிடமும் விளக்கம் கேட்டு கட்சியின் கொறடா முறைப்படி நோட்டீஸ் அனுப்பவுள்ளார். தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக தகுதிநீக்க நடைமுறையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

ரூ. 50 கோடி லஞ்சம்

சிவசேனை (உத்தவ்) தரப்பு எம்.பி.க்கள் கட்சி மாறுவதற்காக தலா ரூ. 50 கோடி லஞ்சம் வழங்க பேரம் பேசப்பட்டுள்ளது என்று சிவசேனை (உத்தவ்) கட்சி மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த ஒருங்கிணைந்த சிவசேனை கட்சி, கடந்த 2022-இல் இரண்டாக பிளவுபட்டது. தற்போதைய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மூன்றில் இரு பங்கு எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்தனா். பின்னா், உண்மையான சிவசேனை என்ற அங்கீகாரமும், கட்சியின் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சி கூட்டணியில் போட்டியிட்ட சிவசேனை (உத்தவ்) கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியது. இந்த 9 எம்.பி.க்களில் 7 எம்.பி.க்கள், தற்போது அதிருப்தியாளா்களாக உருவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த 7 பேரும் உத்தவ் கட்சியில் இருந்து தனி அணியாக பிரிந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் தங்களை இணைத்துக் கொள்ள தயாராகி வருவதாகவும், இதற்காக தில்லியில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், 9 எம்.பி.க்களில் 3 பேர் கட்சித் தலைமை அழைப்பை ஏற்று, கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

summary

Meeting of Shiv Sena (Uddhav faction) MPs! 6 out of 9 skip the meeting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.