தில்லி திரும்பினார் சோனியா
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை அதிகாலையில் தில்லி திரும்பினார்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை அதிகாலையில் தில்லி திரும்பினார்.
சில நாள்கள் ஓய்வெடுத்த பிறகு வழக்கமான கட்சிப் பணிகளை சோனியா காந்தி மேற்கொள்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்ற சோனியா, தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற வேளையில், சோனியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சோனியா, எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய நோய் பிரிவில் சுமார் ஐந்து மணி நேரம் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், தனது மகள் பிரியங்காவுடன் சோனியா காந்தி அமெரிக்காவுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி புறப்பட்டார்.
எனினும், அவரது உடல் நலக்குறைவு குறித்தும், அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சியும், அமெரிக்க மருத்துவமனை நிர்வாகமும் வெளியிடவில்லை.
இதற்கு முன்பும், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சோனியா சிகிச்சை பெற்றுள்ளார். அதே மருத்துவமனையில் தற்போதும் அவர் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது.