நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் பங்கு என்ன? மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவு
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களுங்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் பெரும் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்குகளை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தப் பொதுநல வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதியிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, 1993ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற சுரங்க ஒதுக்கீடு தொடர்பான பரிசீலனைக் குழுக் கூட்டங்களின் அறிக்கைகளையும், இந்த ஒதுக்கீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தொகுத்து தாக்கல் செய்யுமாறு அட்டர்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர்கள் மேலும் கூறியது:
Advertisement
இந்த ஒதுக்கீட்டில் மாநில அரசுகளின் பங்கு என்ன என்பதை அட்டர்னி ஜெனரல் விளக்க வேண்டும். சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்களின் மனுக்களை நாங்கள் பரிசீலிக்கவில்லை. சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் நடவடிக்கையில் நேர்மையற்ற நடைமுறை ஏதாவது பின்பற்றப்பட்டதா என்பது குறித்தே பரிசீலிக்கிறோம். அது சட்டப்படி நடைபெற்றதா? அல்லது விதிகளுக்குப் புறம்பாக நடைபெற்றதா? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை மேற்கொள்ள கொள்கை ஏதாவது அமலில் இருந்ததா என்பதை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.