முகப்பு
இந்தியா

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸூக்கும் பாடம்

கர்நாடகத்தில் பா.ஜ.க. தோற்றது, எங்கள் கட்சிக்கும் காங்கிரஸூக்கும் ஒரு பாடமாகும் என்று எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

Updated On : 13 மே 2013, 1:00 am IST
பகிர்:

கர்நாடகத்தில் பா.ஜ.க. தோற்றது, எங்கள் கட்சிக்கும் காங்கிரஸூக்கும் ஒரு பாடமாகும் என்று எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது இணையதள வலைப்பூவில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

ஊழல் காரணமாக கர்நாடக பேரவைத் தேர்தலில் மக்கள் தங்கள் கோபத்தைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் இதே கோபம் மத்திய அரசின் மீதும் காட்டப்படாதா? நாங்கள் கர்நாடகத் தேர்தலில் தோற்றதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் இந்த முடிவைக் கண்டு நான் வியப்படையவில்லை. இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன். கர்நாடகத் தேர்தல் முடிவானது பா.ஜ.க.வுக்கு முக்கியமான பாடமாகும். ஒரு விதத்தில் அது காங்கிரஸýக்கும் பாடம்தான். "மக்களுக்கு எங்களை விட்டால் வேறு கதியில்லை' என்று கருத வேண்டாம் என இரு கட்சிகளுக்கும் போதிக்கப்பட்ட பாடம் இது.

Advertisement

Advertisement

நிலக்கரிச் சுரங்கம் மற்றும் ரயில்வே லஞ்ச விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு கர்நாடகத் தேர்தல் முடிவுகள்தான் காரணமாக அமைந்தன. ஏனெனில், இந்த ஊழல் விவகாரங்களால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி முற்றிலும் முடங்கியபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் உறுதியாக இருந்தது. ஊழலுக்கு எதிரான மக்களின் கோபத்தை கர்நாடகத் தேர்தல் முடிவு மூலம் அறிந்த காங்கிரஸ் அதன் பிறகே, மேற்கண்ட அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்கியது.

கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி நடைபெற்றபோது, பா.ஜ.க. உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், அதன் பின் நிலவரமே வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், அவரது தவறுகளை மன்னித்து, அவரைத் திருப்திப்படுத்துவதற்கு எங்கள் கட்சி பல மாதங்களாகத் தீவிர முயற்சி எடுத்தது. பா.ஜ.க. நடைமுறை சார்ந்த விவேகமான அணுகுமுறையைக் கையாளாததால், தென்னிந்தியாவில் இருந்த ஒரே மாநில அரசையும் இழந்துவிட்டது என்பதே இப்போது தேர்தல் மூலம் கிடைத்துள்ள செய்தியாகும்.

கர்நாடகத்தில் நிலவிய சூழ்நிலையை எங்கள் கட்சி கையாண்ட விதம் மிகவும் சந்தர்ப்பவாத அடிப்படையில் இருந்தது என்று நான் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். அங்கிருந்த சூழ்நிலையை பா.ஜ.க. சரியான விதத்தில் சமாளிக்கவில்லை. நாட்டின் விவகாரங்களை கவனிக்கும் நபர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ளும்போது சாமானிய மனிதன் கோபமடைகிறான். இதுதான், சமீப காலமாக அரசியல்வாதிகள் மீது மக்கள் கோபமடைவதற்கு அடிப்படைக் காரணமாகும். எங்கள் கட்சியில் இருந்து எடியூரப்பாவை நாங்கள் நீக்கவில்லை. அவர்தான் வெளியேறிச் சென்றார் என்று அத்வானி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.