முகப்பு
இந்தியா

காவிரி: ஏப்.12-இல் கர்நாடகத்தில் முழு அடைப்பு- கன்னட அமைப்புகள்

காவிரி விவகாரத்தில் தமிழகம் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பதிலடி தரும் வகையில், ஏப்.12-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட சலுவளிக் கட்சி தலைமையிலான

Updated On : 6 ஏப்ரல் 2018, 1:04 am IST
பகிர்:

காவிரி விவகாரத்தில் தமிழகம் நடத்திய முழு அடைப்பு போராட்டத்துக்கு பதிலடி தரும் வகையில், ஏப்.12-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட சலுவளிக் கட்சி தலைமையிலான கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 16-ஆம் தேதி அளித்திருந்த தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகள் வியாழக்கிழமை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதற்கு பதிலடி தரும் வகையில், கர்நாடக-தமிழக எல்லையில் கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் வியாழக்கிழமை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி, கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்றத்தலைவர் சா.ரா.கோவிந்த், கன்னட சேனாவின் தலைவர் கே.ஆர்.ரமேஷ், கர்நாடக ரக்ஷனவேதிகே தலைவர் சிவராமே கெளடா, பிரவீண் ஷெட்டி, கன்னட விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் மஞ்சுநாத் தேவு, எச்.பி.கிரீஷ் கெளடா உள்ளிட்ட கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, வாட்டாள் நாகராஜ் பேசியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. 
இந்த போராட்டத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் ஏப்.12-ஆம் தேதி கர்நாடக முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 
எந்த காரணத்தை முன்னிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக் கூடாது. காவிரி ஆற்றுநீர்ப் பகிர்வில் தொடர்ந்து கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுவருகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறைந்தபட்ச நியாயம் கிடைத்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும். 
காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலம் கர்நாடகத்தில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் உரிமை மத்திய அரசுக்கு சென்றுவிடும். இதை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடவில்லை. 
காவிரி விவகாரத்தில் இதுவரை கருத்துத் தெரிவிக்காமல் இருந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தற்போது கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசியல் லாபத்துக்காக காவிரி விவகாரத்தில் இருவரும் பேசி வருகிறார்கள். இனிமேல் கர்நாடகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படும். 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முயற்சித்தால் கர்நாடகத்தில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார். 
பேருந்துகள் இயக்கம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை. 250 கர்நாடக அரசுப் பேருந்துகள் அனைத்தும் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டிருந்தன. மாலை 6 மணிக்குப் பிறகு கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்கு இயக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments