ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படுவது காஷ்மீரை பாதிக்கும்: காவல்துறை முன்னாள் தலைவர்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படுவது, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அந்த மாநில காவல்துறை முன்னாள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படுவது, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அந்த மாநில காவல்துறை முன்னாள் தலைவர் (டிஜிபி) கே. ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடும் வகையில், ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கிருக்கும் 7,000 படைகளை அமெரிக்க திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கே. ராஜேந்திர குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ஆப்கானிஸ்தானில் இருக்கும் படைகளை அமெரிக்கா திரும்பப் பெற போகிறது. இது காஷ்மீரில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதும், பயங்கரவாத அமைப்புகள் வலுவடைந்து, தைரியமாக செயல்பட தொடங்கி விடும். இது தங்களின் வெற்றியாக பயங்கரவாத அமைப்புகள் கருதும். இந்தியாவை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று பயங்கரவாத அமைப்புகள் எண்ணும். அதனால் காஷ்மீரில் பயங்கரவாதத்தை கையாள்வதற்கு இந்தியா உடனடியாக தெளிவான முடிவை எடுக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது.
பாகிஸ்தானில் எந்த அரசு ஆட்சியிலிருந்தாலும் சரி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளால் பயங்கரவாதம் முதலில் உருவானது. ஆனால் தற்போது அது இஸ்லாமிய தீவிரவாதமாக மாறி வருகிறது.
தேச விரோத சக்திகளை எதிர்கொள்ள கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன. இளைஞர்கள் பயங்கரவாதத்தை கைவிடுவதை ஊக்குவிக்கும் வகையில் வலுவான கொள்கையும் அவசியமாகும். பயங்கரவாதத்தை விட்டு சரணடையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பது, அவர்கள் மீண்டும் பயங்கரவாதத்துக்கு திரும்பாதது ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், சரணடையும் கொள்கை இருக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.