முகப்பு
இந்தியா

விவசாயிகளை ஏமாற்றுகிறது காங்கிரஸ்! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

"காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன' என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:54 am IST
பகிர்:

"காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன' என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அண்மையில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் கட்சி, ரூ.2 லட்சத்துக்கு உள்பட்ட அனைத்து விவசாயக் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்த போதும், சுமார் ஓராண்டுக்கு முன்பாக பஞ்சாபில் ஆட்சி அமைத்த போதும் அந்த மாநிலங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த மாநிலங்களில் விவசாயக் கடன்கள் இதுவரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

கர்நாடகத்தில் ரூ.45,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், இதுவரை ரூ. 75 கோடி விவசாயக் கடன்களைக்கூட அவர்கள் தள்ளுபடி செய்யவில்லை.  விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு, நிகழாண்டு பட்ஜெட்டில் கர்நாடக அரசு ரூ. 3 கோடிதான் ஒதுக்கியுள்ளது. மேலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு 397 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு தேசிய வங்கிகளை காங்கிரஸ்  ஆளும் மாநில அரசுகள் கோரியுள்ளன. ஆனால், அதற்கு ஈடான பணத்தை, அந்த வங்கிகளுக்கு வழங்க அவை மறுக்கின்றன.  இதை வங்கிகளைக் கொள்ளையடிக்கும் செயலாகவே பார்க்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, இவ்வாறுதான் வங்கிகளை  அக்கட்சி கொள்ளையடித்தது. மேலும், கர்நாடகத்தில் கடன் தள்ளுபடிக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஆவணத்தில் 52 பகுதிகளை நிரப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.

வெறும் 15 சதவீத விவசாயிகளால் மட்டுமே இந்த 52 பகுதிகளையும் பூர்த்தி செய்ய முடியும்.  இது காங்கிரஸ் கட்சியின் இன்னொரு ஏமாற்றுத் தந்திரமாகும்.  இதற்கிடையே,, விவசாயக் கடன்களைச் செலுத்தாமல் உள்ள  விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீஸும் அனுப்பியுள்ளன. இந்த நோட்டீஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் விவசாயிகளை காவல் துறை மூலம் காங்கிரஸ் அரசு அச்சுறுத்தி வருகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments