முகப்பு
இந்தியா

பிஎஸ்-6 தரச் சான்று பெறாத வாகனங்களை விற்க 2020 முதல் தடை?

பிஎஸ்-6 (பாரத் ஸ்டேஜ்) எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டு தர நிர்ணயத்துக்கான புதிய கொள்கைகளின்படி தயாரிக்கப்படாத வாகனங்களை 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு விற்பனை

Updated On : 24 ஜூலை 2018, 1:16 am IST
பகிர்:

பிஎஸ்-6 (பாரத் ஸ்டேஜ்) எனப்படும் மாசுக் கட்டுப்பாட்டு தர நிர்ணயத்துக்கான புதிய கொள்கைகளின்படி தயாரிக்கப்படாத வாகனங்களை 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
பெட்ரோலுக்கும், டீசலுக்கும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயிப்பது சாத்தியமில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெருகி வரும் வாகனங்களால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுகிறது. தில்லி போன்ற பெரு நகரங்கள் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு கடிவாளமிடும் வகையில் சூழலுக்கேற்ப மாசுக் கட்டுப்பாட்டு தரக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அந்த விதிகளுக்குட்பட்டே வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்-3 வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, பிஎஸ் 4 தரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் பிஎஸ்-6 தரச் சான்று விதிகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தில்லியில் காற்று மாசு ஏற்படும் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. டீசல் வாகனங்களால்தான் அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும், பெட்ரோலைக் காட்டிலும் டீசல் விலை குறைவு என்பதால், அந்த ரக வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பெட்ரோலுக்கும், டீசலுக்கும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயிப்பது குறித்தும், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதுகுறித்த பதில் மனுவை, நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
2020 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு பிஎஸ்-6 தரக் கொள்கைகளுக்கு உட்படாமல் வாகனங்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. அதற்கான தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும். டீசல் மற்றும் பெட்ரோல் விலையை ஒரே மாதிரியாக நிர்ணயித்தால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அந்த பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்ற ஒன்று என்று அந்த பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments