ம.பி. தேர்தல்: பாஜக 2-ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிவராஜ் சிங் சௌஹான் வேட்பு மனு தாக்கல்
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை அக்கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், மறைந்த
மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை அக்கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினரும், மக்களவை எம்.பி.யுமான அனூப் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு, வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த 2003-இல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. இம்முறையும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜக தேர்தல் பணியாற்றி வருகிறது.
ஏற்கெனவே 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதையடுத்து, 17 வேட்பாளர்கள் அடங்கிய 2-ஆவது பட்டியலை, தில்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா திங்கள்கிழமை வெளியிட்டார். இதில், மொரீனா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யும், வாஜ்பாயின் உறவினருமான அனூப் மிஸ்ரா, பிதர்வால் பேரவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2013 பேரவைத் தேர்தலில் இவர் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதேபோல், முன்னாள் எம்.பி.யும், பழங்குடியின சமூக தலைவருமான திலீப் சிங் புரியாவின் மகள் நிர்மலா புரியாவுக்கு, பெட்லாவாட் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிவராஜ் சிங் சௌஹான் வேட்பு மனு: இதனிடையே, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், சிஹோர் மாவட்டத்திலுள்ள புத்னி தொகுதியில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். சிஹோர் மாவட்டத்தில்தான், சௌஹானின் சொந்த கிராமம் உள்ளது.
புத்னி தொகுதியிலிருந்து கடந்த 1990-இல் முதல்முறையாக எம்எல்ஏ-ஆக தேர்வான சௌஹான், கடந்த 2006-இல் அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 2008, 2013 பேரவைத் தேர்தல்களிலும் இத்தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது மீண்டும் புத்னியில் களமிறங்கும் சௌஹான், தனது மனைவி சத்னா சிங், மகன்கள் குணால், கார்த்திகேய் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் கடந்த 2003-இல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, சாலைகளில் இருந்த பள்ளங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதன் பிறகு பாஜக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை மக்கள் அறிவர். மாநிலத்தை இருண்ட காலத்துக்கு அழைத்துச் சென்ற காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்றார்.
இதேபோல், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங், சுர்ஹாட் தொகுதியிலும், மாநில அமைச்சர்கள் நரோத்தம் மிஸ்ரா, ஜெயந்த் மலையா ஆகியோர் முறையே தாடியா, தாமோ தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.