பேருந்து மோதி ரெளடி ரங்கா யானை சாவு
கர்நாடகத்தில் திங்கள்கிழமை அதிகாலை தனியார் பேருந்து மோதியதில், ரெளடி ரங்கா என்ற யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள
கர்நாடகத்தில் திங்கள்கிழமை அதிகாலை தனியார் பேருந்து மோதியதில், ரெளடி ரங்கா என்ற யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி வனப்பகுதியில் இந்த விபத்து நேரிட்டது.
இதுகுறித்து மாநில வனப் பாதுகாப்பு தலைமை அதிகாரி புனதி ஸ்ரீதர் கூறியதாவது:
ரெளடி ரங்கா என்று அழைக்கப்பட்ட அந்த யானை, சிலரைத் தாக்கி கொன்றிருக்கிறது.
அந்த யானையை வன பாதுகாப்புக் குழுவினர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிடித்தனர். பின்னர், அந்த யானை, மேட்டிகாட் பகுதியில் உள்ள யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவுதான் அந்த யானை, வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் பகுதியில் உள்ள சாலை வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில், அந்த யானை பலத்த காயமடைந்து, பின்னர் உயிரிழந்தது.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் கூறியிருக்கிறோம் என்றார் அவர்.