மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே இடதுசாரிகளின் முக்கிய பணி
வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே இடதுசாரிகளின் முக்கிய பணி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம்
வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே இடதுசாரிகளின் முக்கிய பணி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து யெச்சூரி செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் மோடி அரசின் ஆட்சியின்கீழ், நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. விவசாய பிரச்னைகள் மோசமடைந்துள்ளது. இதை சரி செய்ய மத்திய அரசு முயலவில்லை. இதன்மூலம் மக்களின் வாழ்வாதாரம் மீது மோடி அரசு கொடூர தாக்குதல்களை தொடுத்துள்ளது.
மதவாத பிரிவினையால் வெறுப்புணர்வு, வன்முறை, தீவிரவாதம் போன்ற சூழ்நிலை பரவி வருகிறது. இதற்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம்களும், தலித்துகளும் பலியாகி வருகின்றனர். மோடி அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள், நாடாளுமன்ற அமைப்புகள், அரசியலமைப்பு அமைப்புகள் ஆகியவற்றை அரசு பலவீனப்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் இளைய பங்காளியாக இந்தியாவை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதனால், நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிப்பதும், மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைவதை உறுதிப்படுத்துவதும்தான், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளின் முக்கிய பணியாகும் என்றார் யெச்சூரி.
சபரிமலை விவகாரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை கேரள மாநில காங்கிரஸார் எதிர்த்து வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு யெச்சூரி பதிலளிக்கையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை காங்கிரஸ் மேலிடம் வரவேற்றுள்ளது. ஆனால் கேரள காங்கிரஸார் எதிர்க்கின்றனர். இந்த நடவடிக்கையானது, ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக-ஆர்எஸ்எஸ்சுக்கு சாதகமாகிவிடும் என்றார்.