முகப்பு
இந்தியா

சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்ல என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2018 at 1:28 AM
பகிர்:

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்ல என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தரமான சேவை வேண்டுமென்றால் அதற்கான பணத்தை மக்கள் செலுத்தியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
சுங்கச் சாவடி கட்டணம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. தரமான சாலைகள் அமைப்பதற்காகவும், அவற்றைப் பராமரிக்கவும் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
சாலைகள் சிறப்பாக இருப்பதன் மூலம் எரிபொருள் சிக்கனம், குறைவான பயண நேரம், வாகனங்களின் பராமரிப்பு செலவு குறைவு உள்ளிட்ட நன்மைகள் உள்ளன. தரமான சேவை வேண்டுமென்றால் அதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று ஒரு கருத்து உள்ளது உண்மைதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் இக்கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, இது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்க முடியாது.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி செலவில், 83,677 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்றார்.
தொடர்ந்து வாரிசு அரசியல் தொடர்பாகப் பேசிய கட்கரி, 'நான் எனது கொள்கைகளின்படி செயல்படுகிறேன். எனது குடும்பத்தில் இருந்து யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவும் இல்லை; வாய்ப்பு கேட்கவும் இல்லை. இதுவரை என்னைத் தவிர எனது குடும்பத்தில் யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.