காங்கிரஸ் கட்டமைப்பு குறித்து கற்றறிந்து வருகிறேன்: பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு குறித்து கற்றறிந்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு குறித்து கற்றறிந்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், பிகெனீர் மாவட்டத்தில், முறைகேடான வழிகளில் நிலஒதுக்கீடு பெற்றதாக, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு எதிராகப் புகார் எழுந்தது. அதுகுறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் செவ்வாய், புதன் ஆகிய இருதினங்களாக விசாரணைக்காக ராபர்ட் வதேரா ஆஜரானார். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவுக்கு வந்திருந்த பிரியங்கா காந்தியிடம், வதேராவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு பிரியங்கா காந்தி அளித்த பதில்:
இதுபோன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். நான் எனது பணியை செய்து வருகிறேன். காங்கிரஸின் அமைப்பு முறை குறித்து நிறைய கற்றறிந்து வருகிறேன். தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து வருகிறேன் என்றார் அவர்.
காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கும்போது, அவர்கள் அளிக்கும் உற்சாகம் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
தொண்டர்களுடன் சந்திப்பு: இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான அமேதிக்கு சென்ற பிரியங்கா காந்தி அங்கு தொண்டர்களைச் சந்தித்து உரையாடினார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக தொண்டர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிந்தார். அதேபோல், கட்சியின் மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தொண்டர்களின் மனநிலை என்னவென்பதையும் பிரியங்கா காந்தி கேட்டறிந்து கொண்டதாக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியான அசோக் சிங் தெரிவித்தார்.
இளைஞர்கள், பெண்கள், முதியோர் என சமூகத்தின் அனைத்து தரப்பினருடனும் காங்கிரஸ் தொண்டர்கள் இணக்கமாக இருக்க வேண்டும் என பிரியங்கா காந்தி அறிவுறுத்தியதாகவும், மக்களவைத் தேர்தலுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறியதாகவும் அசோக் சிங் தெரிவித்தார்.