குஜ்ஜார் சமூகத்துக்கு 5% இடஒதுக்கீடு: ராஜஸ்தான் பேரவையில் மசோதா நிறைவேறியது
குஜ்ஜார் உள்ளிட்ட 5 சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒடுக்கீடு அளிப்பதற்கு வகை செய்யும் இடஒதுக்கீடு மசோதா
குஜ்ஜார் உள்ளிட்ட 5 சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒடுக்கீடு அளிப்பதற்கு வகை செய்யும் இடஒதுக்கீடு மசோதா ராஜஸ்தான் சட்டப் பேரவையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு, உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
தங்கள் சமூகத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கோரி கடந்த ஒரு வாரமாக குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதுதவிர சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தால் ராஜஸ்தானில் மட்டுமன்றி, ராஜஸ்தான் வழியாக கடந்து செல்லும் வெளிமாநில ரயில்கள் பலவும் நிறுத்தப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து மசோதா ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பி.டி.கல்லா, பேரவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா மூலம் மாநிலத்தில் இப்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள 21 சதவீத இடஒதுக்கீடு 26 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த 5 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு குஜ்ஜார், பஞ்சாராஸ், காதியா, ராய்கா, லோகார், கதாரியா ஆகிய ஜாதியினருக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கை மூலம் குஜ்ஜார் போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. இதனால், மாநிலத்தில் அமைதி திரும்பவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இடஒதுக்கீடு விஷயத்தில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும். அதில் தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்விதமாக ஏதாவது பிரிவுகள் இருந்தால் மீண்டும் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று குஜ்ஜார் தலைவர் கிரோரி சிங் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே மாதேபூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தர்னாவில் ஈடுபட்டுள்ள கிரோரி சிங்குக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து தேவையான மருத்துவ உதவிகளைஅளித்தனர்.