முகப்பு
இந்தியா

இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட அனுமதி கூடாது: மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

இரு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:24 am IST
பகிர்:


இரு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தலில் நிற்பது, அரசுப் பணி, அரசு மானியங்கள் மற்றும் உதவிகளைப்பெற இரு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஏனெனில், மக்கள்தொகை பெருக்கம்தான் நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக உள்ளது. 
மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. ஆனால், அதனால் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. எனவே, அரசுப் பணியில் சேருவது, அரசு மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவது, தேர்தலில் நிற்பது போன்றவற்றுக்கு இரு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதை கட்டாயமாக்க வேண்டும். முக்கியமாக, இரு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.