எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில் பெண் பத்திரிகையாளருக்கு ஜாமீன்
முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில், பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கில், பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
திரைத் துறை உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட பாலியல் ரீதியான பிரச்னைகளை மீ டு சமூக வலைதள பிரசாரத்தின் மூலம் கடந்த ஆண்டு வெளிப்படுத்தினர்.
இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப்பிரசாரத்தில், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பருக்கு எதிராகவும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இவர் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
பத்திரிகை துறையில் பணியாற்றிய போது தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உள்பட பல பெண்கள் புகார் கூறினர். இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்று மறுப்பு தெரிவித்த எம்.ஜே.அக்பர், பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக தில்லி தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் திங்கள்கிழமை (பிப்.25) நேரில் ஆஜராகும்படி பிரியா ரமணிக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அவர் ஆஜரானார்.
அப்போது, ரூ.10 ஆயிரத்துக்கான உத்தரவாத பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி சமர் விஷால் உத்தரவிட்டார்.