புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்கிறது பாஜக அரசு: மம்தா குற்றச்சாட்டு
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை வைத்து மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை வைத்து மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான சர்வாதிகார அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்றார். அவர், மேலும் பேசியதாவது:
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தகவல் கொடுத்திருக்கிறது. இருப்பினும், நமது பாதுகாப்புப் படை வீரர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், பாதுகாப்பு படை வீரர்களின் சடலங்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பதற்காகவே, அவர்களை மத்திய அரசு சாக விட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலையொட்டி, போர் பதற்ற நோயை உருவாக்க அரசு முயலுகிறது.
மத்திய அரசு மிகவும் விசித்திரமான முறையில் இயங்குகிறது. அரசின் முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.
இந்த அரசு, இரு சகோதரர்களால் (மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா) இயங்குகிறது. அவர்கள் இருவரும் ரத்தக் கறை படிந்த கரங்களைக் கொண்டவர்கள்.
வரும் மக்களவைத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.
எனவே, திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அவர்களின் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் 42 தொகுதிகளிலும் நம் கட்சி வெற்று பெறும் என்றார் மம்தா பானர்ஜி.
பாஜக பதிலடி: இதனிடையே, மம்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவது இது முதல் முறையல்ல. எனவே அரசியல் ஆதாயத்துக்காக, புல்வாமா தாக்குதல் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதை மம்தா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தில் தனது செல்வாக்கை வேகமாக இழந்து வரும் அவர், பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார். பிரதமர் பதவிக்கும் ஆசைப்படுகிறார். வரும் மக்களவைத் தேர்தலில், மம்தா தோல்வியடைவது உறுதி என்றார் திலீப் கோஷ்.