சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு
சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை மத்திய அரசு நியமித்தது.
இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது.
அதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவியேற்ற 2 நாள்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலைக்குழு அறிவித்தது. அதைத்தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் மீண்டும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அவரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காமன் காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தில்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி, நிரந்தர சிபிஐ இயக்குநரை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குநராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.