நமோ செயலி மூலம் மக்களிடம் கருத்து கேட்கிறார் பிரதமர்!
எதிர்க்கட்சிகள் அமைத்து வரும் மகா கூட்டணி, உங்கள் தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று பிரதமர் நரேந்திர மோடியின் நமோ செயலி மூலம் பொதுமக்களிடம்
எதிர்க்கட்சிகள் அமைத்து வரும் மகா கூட்டணி, உங்கள் தொகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று பிரதமர் நரேந்திர மோடியின் நமோ செயலி மூலம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை அணுகுவதில் முன்னிலையில் உள்ள பிரதமர் மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு நமோ செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலியைப் பயன்படுத்துபவர்கள் பிரதமர் மோடியின் செய்திகளை உடனடியாகப் பெற முடிவது மட்டுமின்றி, தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் பிரதமருக்கு தெரிவிக்கவும் முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த செயலி மூலம் அனைத்து தொகுதிகளின் நிலவரத்தை அறிந்து கொள்ள பிரதமர் முடிவு செய்துள்ளார். இதற்காக மக்களின் நாடித் துடிப்பு என்ற தலைப்பில் ஒரு கணக்கெடுப்பு நமோ செயலி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதில், முக்கிய கேள்வியாக உங்கள் தொகுதியில் மகா கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது இடம் பெற்றுள்ளது.
இது தவிர ஆய்வில் பங்கேற்றும் நபரின் மாநிலம், தொகுதி மற்றும் அவரது பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற விவரங்களும், சுகாதாரம், உள்கட்டமைப்பு, விவசாயிகள் நலன், வேலைவாய்ப்பு, ஊரக மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த கருத்துகளும் கோரப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் அனைவரும் பங்கேற்று கருத்து தெரிவிக்க வேண்டுகோள் விடுத்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு விடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அதில், நமோ செயலி மூலம் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்; முக்கிய முடிவுகளை மேற்கொள்ள உங்கள் கருத்துகள் அவசியமானவை என்று பிரதமர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.