மோடிக்கு காங்கிரஸ் முஸ்லிம் எம்எல்ஏ புகழாரம்
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் எம்எல்ஏ ரோஷன்பெய்க் தனது சுட்டுரையின் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் எம்எல்ஏ ரோஷன்பெய்க் தனது சுட்டுரையின் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக உள்ள ரோஷன்பெய்க், அண்மைக் காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். பெங்களூரு, சிவாஜிநகர் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் ரோஷன் பெய்க், கடந்த 5 ஆண்டுகாலமாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துவந்தார்.
அண்மையில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புக் கேட்டிருந்தார். இதன்மூலம் சிவாஜிநகர் சட்டப்பேரவை தொகுதியில் தனது மகன் ரூமன் பெய்கை காங்கிரஸ் வேட்பாளராகவும் முனைப்பில் இருந்தார்.
இத் திட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை பச்சைக்கொடி காட்டததன் விளைவாக, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அவர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ரிஸ்வான் அர்ஷத்துக்கு ஆதரவான பிரசாரங்களில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ரிஸ்வான் அர்ஷத்துக்கும் ரோஷன் பெய்க்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்திருந்தது. மே 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று தெரியவந்ததும், காங்கிரஸ் கட்சியை ரோஷன் பெய்க் வெளிப்படையாக சரமாரியாக விமர்சித்து தள்ளினார். இது காங்கிரஸ் கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது சுட்டுரையில் பிரதமர் மோடியை ரோஷன் பெய்க் வானளாவப் புகழ்ந்துள்ளார். அதில்,"நாடாளுமன்றத்தின் மத்திய அவையில் பேசிய பிரதமர் மோடி, இந்திய நாட்டின் சிறுபான்மையினர் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
பிரதமராக மீண்டும் பதவியேற்பதற்கு முன்பாகவே சமூக ஒற்றுமை குறித்து சிந்தித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே இந்தியா என்ற கருத்தை பலப்படுத்தவும், கடந்த பல ஆண்டுகளாக அச்ச உணர்வை விதைத்திருப்பதை விலக்கவும் எடுத்துள்ள முதல்படியாகவே இதைக் கருதுகிறேன்.
பிரதமர் மோடி, சொன்னபடி நடந்து கொள்வார் என்று நம்புவதோடு, ஒருங்கிணைந்த இந்தியாவை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன். வாக்கு வங்கியை கவருவதற்காக, தேர்தல் பிரசாரத்தில் இதைப் பேசாமல், தேர்தல் வெற்றிக்கு பிறகு பேசியதால் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.