முகப்பு
இந்தியா

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி: ஸ்ரீஹரிகோட்டாவிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கடல்வழியாக தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:05 AM
பகிர்:


கடல்வழியாக தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை எதிரொலியாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் போலீஸார், உளவுத்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பு, சோதனை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள செயற்கைக்கோள் ஏவுதளத்தில்  தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க அந்த பகுதியில் உச்சகட்ட பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலோரத்தில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா வனப்பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க செயற்கைகோள் ஏவுதளத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகள் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பின் ஒரு பகுதியாக முக்கிய சாலையைக் கடந்து ஸ்ரீஹரி கோட்டாவிற்குச் செல்லும் சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் வழக்கத்தைவிட அதிக போலீஸார் குவிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது.
அதேபோல் ஸ்ரீஹரிகோட்டா பகுதியை ஒட்டி இருக்கும் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கடலோரக் காவல்படையினர் விசாரணை செய்கின்றனர். மீனவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை போலீஸார் தனியே அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.