முகப்பு
இந்தியா

11 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

ரயில்வே துறையில் பணியாற்றும் 11.52 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:08 AM
இந்தியன் ரயில்வே
பகிர்:


ரயில்வே துறையில் பணியாற்றும் 11.52 லட்சம் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்திசார் ஊக்கத் தொகை (போனஸ்) ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2018-19 ஆம் ஆண்டுக்கும் அதே அளவு போனஸ் தொகையை வழங்க ரயில்வே வாரியம் முடிவெடுத்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 11 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.2,024.40 கோடி செலவாகும் என்றார். 
ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் போனஸ் வழங்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊழியர் சங்கங்கள் அதிருப்தி: இதனிடையே, போனஸ் குறித்து ரயில்வே ஊழியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு ஒன்று ரயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  அனைத்து காலகட்டங்களிலும் கடுமையாகப் பணியாற்றி வருபவர்கள் ரயில்வே ஊழியர்கள். இந்த ஆண்டு, போனஸ் தொகை அதிகரிக்கப்படும் என்று நம்பினோம். ஆனால், அதே அளவு போனஸ் வழங்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.