ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிரான வேதாந்தா மனு மீதான விசாரணையில்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம், கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தமிழக அரசு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தரப்பு வாதங்கள் நடந்தது.
Advertisement
Advertisement
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் பிப். 7 ஆம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று திங்கள்கிழமை அதிரடி தீர்ப்பு வெளியானது.
நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என, தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிரான வேதாந்தா மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் ரத்து செய்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்கும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு இல்லை என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு அறிவுறுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு ஆணை செல்லும் என கூறியுள்ளது.
இதனிடையே, தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தீர்ப்பின் நகல் கிடைத்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.