ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் எரிக்கப்பட்ட இடத்துக்கு அருகே மற்றொரு எரிக்கப்பட்ட பெண்ணின் சடலம்!
சைபராபாத் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஹைதராபாத்: சைபராபாத் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஷம்ஷாபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் மற்றொரு பெண்ணின் எரிந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.
தங்களது பணி நிமித்தமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள், ஓரிடத்தில் இருந்து புகை வருவதையும், மிக துர்நாற்றம் வீசுவதையும் அறிந்து அங்குச் சென்றனர்.
Advertisement
ஒரு வழிபாட்டுத் தலம் இருப்பதையும், அதற்கருகில் புதர் மறைவில் ஒரு உடல் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கிருந்த துணிகளைக் கொண்டு உடலை அணைக்க முயன்றுள்ளனர். அதே சமயம், ஒரு இளைஞர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எரிக்கப்பட்ட பெண் 35 - 40 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பெட்ரோல் போன்ற ஏதோ ஒரு திரவத்தைக் கொண்டு அப்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டுள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே ஒரு வழிபாட்டுத் தலம் இருப்பதாகவும், அங்கு சிலர் தீட்சைப் பெற்று வழிபாட்டுத் தலத்திலேயே தங்கியிருப்பதும் தெரிய வந்ததை அடுத்து அவர்களிடம் சம்பவம் பற்றி விசாரித்தனர். ஆனால், யாரையும் தாங்கள் பார்க்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.