ஜிஎஸ்டி இழப்பீடு:மாநிலங்களுக்கு 10-ஆவது தவணையாக ரூ.6,000 கோடி விடுவிப்பு
மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மேலும் ரூ.6,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 10-ஆவது தவணையாக இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மேலும் ரூ.6,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 10-ஆவது தவணையாக இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் மத்திய அரசு மதிப்பிட்டது. இந்த வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு சிறப்பு சாளர முறையில் மத்திய அரசு கடன் திரட்டி மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி மத்திய அரசு கடன் திரட்டி அதனை வாரந்தோறும் தவணை முறையில் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு 10-ஆவது தவணையாக ரூ.6,000 கோடியை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை விடுவித்தது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
மாநிலங்களுக்கு 10-ஆவது தவணையாக விடுவிக்கப்பட்டுள்ள ரூ.6,000 கோடியில் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினா்களாக உள்ள 23 மாநிலங்களுக்கு ரூ.5,516.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. தில்லி, ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.483.40 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ரூ.6,000 கோடி 4.15% வட்டி விகிதத்தில் கடனாக திரட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடாக இதுவரை மொத்தம் ரூ.60,000 கோடி கடனாக திரட்டப்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன்தொகை சராசரியாக ரூ.4.68% வட்டி விகிதத்தில் திரட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.