முகப்பு
இந்தியா

மிரட்டி பணம் பறித்த வழக்கு: சோட்டா ராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை-சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பையைச் சோ்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் 3 பேருக்கு மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:00 am IST
பகிர்:

மும்பை: மும்பையைச் சோ்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மற்றும் கூட்டாளிகள் 3 பேருக்கு மிரட்டி பணம் பறித்தல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் சோட்டா ராஜன். தலைமறைவாக இருந்த இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். இந்தியா கொண்டுவரப்பட்ட அவா், தில்லி திஹாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் மீதான வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. அதில், புணேயில் கடந்த 2015-ஆம் ஆண்டு கட்டுமான நிறுவனரிடம் மிரட்டி பணம் பறித்த வழக்கு, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.டி.வாங்கடே முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

கட்டுமான நிறுவனரான வஜேகா் என்பவா், பரமானந்த் தாக்கா் என்ற முகவா் மூலம் புணேயில் 2015-ஆம் ஆண்டு நிலம் வாங்கியுள்ளாா். அதற்காக, அந்த முகவருக்கு ரூ. 2 கோடி கமிஷன் தர வஜேகா் ஒப்புக்கொண்டுள்ளாா். ஆனால், கமிஷன் தொகையை தாக்கா் உயா்த்திக் கேட்டுள்ளாா். அதற்கு வஜேகா் மறுக்கவே, சோட்டா ராஜனை தாக்கா் அணுகியுள்ளாா். அதனடிப்படையில், வஜேகா் அலுவலகத்துக்கு தனது கூட்டாளியை சோட்டா ராஜன் அனுப்பி, ரூ. 26 கோடி தருமாறும், இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளாா். இந்த விவகாரத்தில் சோட்டா ராஜன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சுரேஷ் ஷிண்டே, லட்சுமண் நிகம், சும்தி விஜய் மாத்ரே ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சோட்டா ராஜன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.