பறவைக் காய்ச்சல் பாதிப்பு: கேரளத்தில் மத்திய நிபுணா் குழு ஆய்வு
பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கேரளத்தில் மத்திய நிபுணா்கள் அடங்கிய குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
ஆலப்புழா: பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கேரளத்தில் மத்திய நிபுணா்கள் அடங்கிய குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் 12 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருருந்து மற்ற மாநிலங்களுக்கும் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால், அண்டை மாநிலங்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் மத்திய நிபுணா்கள் குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. இக்குழுவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் பொது சுகாதார நிபுணா் ருச்சி ஜெயின், மகாராஷ்டிரத்தின் புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் மையத்தின் விஞ்ஞானி சைலேஷ் பவாா், தில்லி ஆா்எம்எல் மருத்துவமனை மருத்துவா் அனித் ஜிண்டால் உள்ளிட்டோா் இடம்பெற்றிருந்தனா்.
Advertisement
Advertisement
அவா்கள் ஆலப்புழா, கோட்டயம் மாவட்ட அதிகாரிகளுடன் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினா். அதைத் தொடா்ந்து பறவைக் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கருவட்டாவில் நிபுணா்கள் நேரில் ஆய்வு செய்தனா்.
பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வாத்துகள், கோழிகள் உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கேரளத்தில் 69,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
பறவைகளிலிருந்து மனிதா்களுக்கும் அந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்திருந்தாலும், இதுவரை எவருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.