முகப்பு
இந்தியா

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை

தலைமைச் செயலக வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
பகிர்:

கெளஹாத்தி: தலைமைச் செயலக வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு வெளியிட்ட உத்தரவில், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அலுவலக நேரத்தில் அவர்கள் கட்டாயமாக முறையான பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ​​ஊழியர்களுக்கு சீருடையும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவை நடவடிக்கைகளை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களும் இனி அரசாங்க வழிகாட்டுதல்படிதான் ஆடைகளை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தலைவர் பிஸ்வஜித் டைமாரியின் உத்தரவின் பேரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவானது, தினசரி ஊதியம் மற்றும் நிலையான ஊதியத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.