சந்திரயான் - 3 வெற்றி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து இந்தியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதனை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து இந்தியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.
சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னா் இன்று நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.
பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் என அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
சந்திரயான்-3 வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரோ அலுவலகத்தில் விஞ்ஞானிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதுபோல தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மேலும் அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் சந்திரயான்-3 வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் அதிகாரிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3