நிலத்தடி நீரை உறிஞ்சியதால் கிழக்கில் சாய்ந்து வரும் பூமி: இனி என்னவாகும்?
நீரை மனிதன் தனது தேவைக்காக உறிஞ்சி எடுத்ததன் விளைவாக பூமி கிழக்கில் கீழாக சாய்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை மனிதன் தனது தேவைக்காக உறிஞ்சி எடுத்ததன் விளைவாக, பூமி தனது அச்சிலிருந்து 80 செ.மீ. அளவுக்கு கிழக்கில் கீழாக சாய்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1993 - 2010 ஆண்டுகளில் மட்டும், நிலத்தடியிலிருந்து மனிதன் தனது தேவைகளுக்காக 2,150 ஜிகா டன்கள் தண்ணீரை உறிஞ்சி எடுத்திருப்பதாகவும் இது கிட்டத்தட்ட 6 மி.மீ.க்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு நிகர் என்றும் ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழ் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2016ஆம் ஆண்டு புவியியல் ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி நீர் மட்டத்தை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பது, பூமியின் சுழற்சியை பாதிக்கத் தொடங்கியிருப்பதாக எச்சரித்திருந்தனர். ஆனால், அது பற்றி அப்போது பெரிய அளவில் புள்ளிவிவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
Advertisement
இந்த நிலையில்தான், 1993 - 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பூமியின் சுழற்சியில் 80 செ.மீ. அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், பூமியின் கால நிலையில் மிகப்பெரிய அல்லது மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.