சிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கின்றனர்: குடியரசு துணைத் தலைவர்
சிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
சிலர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். இருப்பினும், அவர் அண்மையில் நடைபெற்ற எந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ அல்லது மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையையோ குறிப்பிடவில்லை.
இதையும் படிக்க:அசாமில் பெய்த கனமழைக்கு 5 லட்சம் பேர் பாதிப்பு!
அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: சட்டத்துக்கு மேலானவர்கள் என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது. சட்டத்திலிருந்து விலக்கும் ஒருவராலும் கோர முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. சிலர் தங்களுக்கு சட்டரீதியிலான அறிவிப்பு கொடுக்கப்பட்டவுடன் சட்டத்தினை கையிலெடுத்து வீதியில் இறங்குகிறார்கள். சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் கிடையாது. சட்டம் யாரையும் விட்டு விடாது. பொதுச் சொத்துகள் மற்றும் காவல் துறை வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சூழல்களை வளர நாம் எப்படி அனுமதிப்பது? இளைஞர்கள் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் வளர்ச்சி சார்ந்த மற்றும் நேர்மறையான விஷயங்களை பகிர வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை பார்ப்பதற்கு நீங்கள் பெருமைப்பட வேண்டும். இந்தியாவின் இந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாதது. இந்த வளர்ச்சி உங்களது பங்களிப்பால் மேலும் வளரும்.
இதையும் படிக்க: பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது!
இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும். 2047 ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சியடையும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உலகின் 10 வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. கடந்த 2022 செப்டம்பரில் இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணம் அவ்வளவு எளிதானது கிடையாது. இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக வளர்ச்சியடையும். அப்போது இந்திய பொருளாதாரத்தை இயக்குபவர்களாக நீங்கள் இருப்பீர்கள். உலக நாடுகளுக்கும் இந்த விஷயம் தெரியும். உலக நாடுகள் இந்தியாவை கவனித்து வருகின்றன. பிரதமரின் அமெரிக்க பயணம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.